தீக்குள் விரலை வைத்தால்!
தீக்குள் விரலை வைத்தால்!
கடலளவு வாழ்க்கையில் நமது துன்பங்கள் கடுகளவு தான். இதை உணர்ந்து தெளிந்தால் வாழும் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். தெரிந்த நண்பர் ஒருவர் எனது அலுவலகத்திற்கு வந்திருந்தார்.. மனைவியை இழந்து சிறிது நாட்களுக்கு முன்பு தான் மறு திருமணம் செய்தார் . அதிகம் பேசமாட்டார். கோபம் வராது. நல்ல மனிதர்.
இந்த பக்கம் ஒரு வேலை..அப்படியே உங்களையும், சாரையும் பார்த்திட்டு போலாம்னு வந்தேன் என எப்போதாவது அலுவலகம் வந்து போவார். அன்றும் அப்படிதான் போல என நினைத்து “என்ன புது மாப்பிள்ளை சார் அதுக்குள்ள வேலைக்கு வந்திட்டிங்க” என சிரித்து கொண்டே கேட்டேன்.
அவரோ பதில் சொல்லாமல் லேசாக புன்னகைத்தார்.
எனக்கும் வேலை இல்லாதததால் அவரிடம் கொஞ்சம் மொக்கை போடலாம் என்று “அப்புறம் சார் கல்யாண வாழ்க்கை எப்படி போய்கிட்டு இருக்கு” என கேட்க
அதற்கும் மீண்டும் ஒரு புன்னகை மட்டுமே பதில்.
எனது மேசையில் இருந்த பேப்பர் வெயிட்டை கைகளில் திருவியபடியே அமைதியாக அமர்ந்திருந்தார்.
குறைவாக பேசினாலும் முகம் பார்த்து தெளிவாக பேசக்கூடிய நபர் அவர். ஏனோ வந்ததில் இருந்தே அவர் தலை குனிந்து யோசனையிலே இருப்பது போல தோன
“என்னாச்சு சார் …உடம்பு சரியில்லையா ….டீ வாங்கிட்டு வர சொல்லட்டுமா” என கேட்டேன்.
“அதெல்லாம் வேண்டாம் மேடம். எனகென்ன நான் நல்லாத்தான் இருக்கேன்” என சொல்லும்போதே அவர் வார்த்தையில் ஒரு சலிப்பு தெரிந்தது. …
என் மனதில் சிறு நெருடல் தோன்ற அமைதியாக என் வேலை தொடர்ந்தேன். சில வினாடிகள் இந்த அமைதி தொடர்ந்தது.
மனதில் அடக்கி வைத்திருந்த உணர்வுகள் வெளிவர அதிக வார்த்தை பிரயோகம் தேவையில்லை. சில மணித்துளி மௌனம் போதும். அதுவே கரைகளை உடைத்து கடலலையென பொங்கி வரும். அது தான் அப்போதும் நடந்தது.
“இந்த காலத்தில தப்பு செஞ்சாதான் நல்லவன்னு சொல்றாங்க” என அவர் திடீரன பேச ஆரம்பிக்க
எழுதி கொண்டிருந்தவள் நிமிர்ந்து புரியாமல் அவரை பார்த்தேன்.
“மேடம் இந்த உலகம் இருக்கே முன்ன போனா கடிக்கும்…பின்ன போனா உதைக்கும்” என சம்பந்தம் இல்லாமல் அவர் பேசவும்
“என்னாச்சு சார்….கல்யாணம் முடிஞ்சதும் தத்துவம் எல்லாம் பின்றீங்க….. செம ட்ரைனிங் போல” என நான் கேலியாக கேட்கவும்
அவரின் முகம் சுருங்கி போனது. என் பேச்சு அவர் மனதை காயபடுத்திருக்கிறது என எனக்கு புரிய
சார் ….”எதா இருந்தாலும் இதுவும் கடந்து போகும்னு நினைச்சுக்குங்க …எல்லாம் சரியாகிடும் என்றேன்”.
இதுவரை வந்த துன்பத்தை எல்லாம் இப்படிதான் நினைச்சு கடந்து வந்தேன். ஆனா இப்போ தவறு செய்பவன் நானாகி போனது தான் பிரச்சனையே என்றார்.
பெரும்பாலும் ஒருவன் தவறு செய்கிறேன் என புலம்பும்போது அவனாக பார்த்து அதை சொன்னாலொழிய அதை கேட்பதில் எனக்கு எப்போதும் உடன்பாடு கிடையாது.
“விடுங்க சார் ….ஐந்து விரல்களும் ஒன்றாகவா இருக்கு…நம்மளும் எப்பவும் ஒரே மாதிரி இருக்க முடியாதுல….எல்லாம் கால போக்கில மாறிடும் சார் என்றவள் உங்க பிஸினஸ் எல்லாம் எப்படி இருக்கு?” என பேச்சை மாற்றினேன்.
அவரோ ஒரு சில வினாடிகள் என்னையே பார்த்தவர் “மேடம் என்னை உங்களுக்கு ஐந்து வருடமாக தெரியும்.
எனது முதல் மனைவி இறந்து என்னோட அம்மாவும் இல்லாம என் குழந்தைய வச்சுகிட்டு நான் எவ்ளோ போராடினேன்னும் உங்களுக்கு தெரியும்” என்றவர் பேச்சை நிறுத்தி விட்டு என் முகத்தை பார்த்தார்.
நான் எதுவும் பேசவில்லை. அவர் சொல்வதை கேட்பது போன்ற முகபாவனையில் அமர்ந்திருந்தேன்.
பின்னர் அவரே “அதனால் தான் ஒரு பெண்குழந்தை இருக்கும் பெண்ணாக பார்த்து மறுமணம் செய்தேன். நானும் எல்லாம் யோசித்து தான் முடிவும் எடுத்தேன். ஆனாலும் எங்கோ தப்பு நடந்திருக்கிறது என சொல்லும்போதே அவர் குரலில் ஒரு இயலாமை தெரிந்தது..
எனது மகன் மீது எனக்கு பாசம் அதிகம். அதே நேரத்தில் என்னை நம்பி வந்த அந்த பெண்ணையும் நான் பார்க்க வேண்டும் அல்லவா? என்னை கணவனாக ஏற்று கொண்ட அவளால் என் மகனை தன் மகனாக ஏற்று கொள்ள முடியவில்லை. என் மகனின் மனநிலையும் அது தான் என்றவர் ஆனால் அவளின் குழந்தையை நான் என் மகளாக தான் பார்க்கிறேன் என சொல்லி நிறுத்தியவர் மேடம் நான் என்ன சொல்லவரேன்னு உங்களுக்கு புரிகிறதா? என கேட்டார்.
நானோ “சார் இதற்கு நான் என்ன பதில் சொல்ல முடியும்” என கேட்க
“நீங்க பதில் சொல்ல வேண்டாம் மேடம். ஆனா என் மேல் ஏதாவது தவறு இருக்கிறாதாணு மட்டும் சொல்லுங்க…. அப்படி இருந்தா கண்டிப்பா நான் திருத்திக்கிறேன்” என அவர் சொல்லவும் அவர் மனதளவில் எந்த அளவு நொந்து போய் இருக்கிறார் என்பது எனக்கு புரிந்தது. பின்னர் நடந்த நிகழ்வுகளை எல்லாம் சொன்னார்.
அதாவது அந்த சிறுவனும் அந்த பெண்ணை மனதளவில் தாயாக ஏற்று கொள்ள வில்லை. அதனால் எது வேண்டும் என்றாலும் தந்தையிடமே அடைக்கலமாகிறான். அது அந்த பெண்ணிற்கு பிடிக்கவில்லை போல ….அது என்ன நான் இருக்கும்போது அவன் ஏன் உங்களிடம் சொல்கிறான்? என சண்டையிடுகிறாராம். இவரும் மகனிடம் பொறுமையாக எடுத்து சொல்லி இருக்கிறார். அவனும் சொல்வதற்கு எல்லாம் தலை ஆட்டிவிட்டு மீண்டும் இவரிடம் வருகிறானாம். இதனால் அந்த பெண்மணி அவனிடம் கொஞ்சம் கடுமையான வார்த்தை பிரயோகம் செய்கிறாராம். அவரின் பெண்ணிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறாராம். இதை பார்த்து எனக்கு கோபம் வருகிறது. இனியாவது என் வாழ்வில நன்மை வரும் என திருமணம் செய்து எனது நிம்மதியே போய் விட்டது. ஏதோ தவறு செய்து விட்டது போல தோன்றுகிறது என்றவர்
சிறிது நிறுத்தி போதாதற்கு சொந்தகாரர்கள் எல்லாம் நான் ஏதோ பொண்டாட்டிதாசன் என்பது போல் என் மகனை நானே வெறுப்பது போல் எல்லாம் பேசுகின்றனர்…..மேடம் நீங்களே சொல்லுங்க இப்போது எனக்கு இருக்கும் ஒரே சொந்தம் அவள் மட்டும் தான். அவளை காப்பதும் எனது கடமை தானே….என்றவர் அடுத்து எதுவும் பேசாமல் என் முகத்தை பார்த்தவர்
பின்னர் என்ன நினைத்தாரோ மேடம் இன்னொன்னு சொல்றேன். என் மனைவி இறந்த பிறகு வீட்டிற்கு போனாலே ஒரு வெறுமை தான். அக்கா, தங்கை , உறவினர் எல்லாரும் இருந்தாலும் உரிமையாக சாப்பிட வாங்க என கூப்பிட யாரும் இல்லை. ரொம்ப கஷ்டபட்டுட்டேன்…. நன்றாக சாப்பிடவும், சந்தோஷமாக இருக்கவும் தானே இப்படி ஓடி ஓடி சம்பாதிக்கிறோம். என்னதான் சம்பாத்தியம், தைரியம், அந்தஸ்த்து எல்லாம் இருந்தாலும் ஒரு பெண் இல்லாமல் அவை பூர்த்தி அடையாதுன்னு அனுபவத்தில் புரிஞ்சுகிட்டேன். ஆனா மத்தவங்க எல்லாம் அதை வேற கண்ணோட்டத்தில பார்க்கிறாங்க…. என்னால முடியலை மேடம்….என அவர் புலம்பவும்
அவரின் குழப்பமான அந்த மனநிலை எனக்கு நன்கு புரிந்தது. மேலும் எல்லா உணர்வுகளையும் எல்லாரிடமும் பகிர்ந்து கொள்ள முடியாது. அவர் சொல்ல நினைத்து சொல்ல முடியாமல் தவிக்கும் தவிப்பை அவர் முகமே காட்டி கொடுத்தது.
பெண்களை பொறுத்தவரை திருமணம் முடிந்து விட்டால் தன் கணவன் தனக்கு மட்டுமே என்ற உரிமையை யாருக்கும் விட்டு தரமாட்டார்கள். அவர்களை பொறுத்தவரை கணவனுக்கு பிறகுதான் அவள் குழந்தைகளே வருவார்கள். பிறந்ததில் இருந்து தந்தையின் அரவணைப்பில் வளரும் அந்த குழந்தைக்கு அவரை தவிர வேறு யாரிடமும் ஒட்டுதல் வருவது மிகவும் சிரமம். இரண்டுமே நியாமானது தான்.
ஆனால் இது நிரந்திரம் அல்ல …..கண்டிப்பாக மாறும் …….ஆனால் அதற்குள் நடுவில் இருப்பவர்கள் குழப்பி மேலும் அந்த குடும்பத்தில் சிக்கலை ஏற்படுத்தாமல் இருந்தால் மிகவும் நல்லது.
ஆதனால் “விடுங்க சார் கொஞ்ச நாளில் இது எல்லாம் மாறிவிடும்” என்றேன் நான்.
மீண்டும் அவரிடம் அதே புன்னகையே பதிலாக வந்தது. அவர் கிளம்பி சென்று விட்டார்.
அவர் எதிர்பார்த்த பதில் என்னிடம் கிடைத்ததா இல்லையா எனக்கு தெரியாது. சில நேரங்களில் தீர்வை தேடாமல் நம்மை ஆசுவாசபடுத்திகொள்ள தனது மனகுமறலை இது போல் கொட்டி விடுவதும் நல்லது தான்.
உண்மைதானே தோழமைகளே ………..