வாழ்ந்து பார்ப்போம் வா பெண்ணே !!!!!
தேவதையாய் இருந்தது போதும் பெண்ணே!
இனி தேரோட்டி கிருஷ்ணனாய்
நன்மை தீமை சீர்தூக்கி பார்த்து
அனைவர் நலன் அறிந்து செயல்படு.
பெண்ணுக்குள் ஆண் தேடாதே.
உனக்குள் இருக்கும் உன் சக்தியை
உணர்ந்து செயல்படு.
அறிவை ஆயுதமாக மாற்று.
தாய்மையை கவசமாக அணிந்து கொள்.
ஆதிக்கம் செலுத்துபவர்கள் மீது
ஆத்திரம் கொள்ளாதே!
துச்சமென புறம்தள்ளி உன்
கனவை நோக்கி சென்றிடு!
பெண்ணின் குணங்களாம்
அச்சம் நாணம் ,மடம், பயிர்ப்பு .
என அளவீடு செய்வர்.
துவண்டுவிடாதே அதையும்
அணிகலன்களாக மாற்றி கொள்.
அச்சம் கொள் தீயவைகளை கண்டு
நாணம் கொள் உன் அறியாமை கண்டு
மடமை கொள் உன் தனித்தன்மையை
பிறர் தூற்றும்போது.
பயிர்ப்பு கொள் உன் பின்னால்
புறம் பேசுபவர்களை கண்டு.
அடைமொழியில் அடைபட்டு கொள்ளாதே
தனித்து நின்றாலும் துணிந்து நில்.
வயது கூறி வாழ்வை சுருக்கி கொள்ளாதே!
சரித்திரம் படைக்காவிடினும் நமக்கான
வாழ்க்கையை வாழ்ந்து பார்த்திடுவோம்
வா பெண்ணே !!!!!!